நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்கு ஐக்கோர்ட் தடை

சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க கட்டடம் 33 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக, வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, வழக்கறிஞர் ஆணையராக இளங்கோ என்பவரை நியமித்து உத்தரவிட்டனர்.
ஆய்வு முடியும் வரை அவருக்கு இருதரப்பினரும் இணைந்து 1 லட்சம் ரூபாய் மாத ஊதியம் வழங்கவேண்டும் எனவும் அறிக்கையை வரும் 29ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
அதுவரை, அஸ்திவாரப் பணிகளை தவிர கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து, வழக்கு விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.