மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சில தருணங்களில் ஏற்படும் உடல் கோளாறு மலச்சிக்கலாகும். மலச்சிக்கல் வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதனைக் குணப்படுத்தவும் பல வழிகள் கையாளப்படுகின்றன.
சில மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் தேநீரைக் கொண்டும் மலச்சிக்கலைத் தீர்க்கலாம். அவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.
1) சென்னா மூலிகைத் தேநீர் (Senna Tea)
மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச்சிறந்த, சக்திவாய்ந்த மருந்து சென்னா தேநீராகும். இது இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை தேநீராலான வலிமையான மூலிகை சிகிச்சை எனலாம். சென்னா தேநீர் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் வழங்குவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மருந்துக் கடைகளில் பிரஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்கும் இம்மூலிகையில், “சென்னா க்ளைஸ்கோசைட்ஸ் அல்லது சென்னோசைட்ஸ்” எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவற்றின் வலிமையான இயற்கை மலமிளக்கி விளைவுகள் காரணமாக, நவீன மருத்துவத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
சென்னா மூலிகை தேநீர், ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்படக்கூடாது. அப்படி இரு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்பட்டால், பல்வேறு பக்க விளைவுகள் உருவாக வழிவகுக்கும்.