ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் சாலையின் நிழல் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது வேனை மோதியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாத அமைப்பான ஐஸிஸ் ( ISIS) இத்தாக்குதலை தாம் செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், போலீசார் இதனை தீவிரவாத தாக்குதலாகவே கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் மரங்களின் நிழல் சூழ்ந்த பாதசாரிகள் செல்லும் பக்கவாட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக வாகனத்தை ஓட்டியதில் பலர் இறந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்ததையொட்டி அங்கு கடும் பதற்றமான நிலை நிலவியது.
முன்னதாக 13 பேர் இறந்தாக தெரிவிக்கப் பட்டிருந்தாலும், பின்னர் 12 பேர் இறந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடம் இரத்தவெள்ளமாக காட்சியளித்தது என்று போலிசார் கூறியுள்ளனர். படுகாயமடைந்த சிலர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுவதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.