பீகார், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மானிலங்களில் பா.ஜ.க.வினால் நிகழ்த்தப்படும் குதிரைபேர அரசியலின் விளைவாக, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ராஜ்யசபாவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பெரும்பான்மை பெற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தற்போது, 80 எம்.பி.,க்களின் ஆதரவு தான் உள்ளது. பீகாரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வின் பின்புல வேலைகளால் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு உருவாகி உள்ளது. எனவே, ஐக்கிய ஜனதா தளத்தின், ஒன்பது எம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால், தே.ஜ., கூட்டணி அரசின் பலம், 89 ஆக உயரும். இதுபோலவே பாஜகவின் குதிரைபேர அரசியலினால் குஜராத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறும் ச்ச்ழல் இருக்கிறது. இங்கிருந்து அமித்ஷா, ஸ்மிருதி இரானி மற்றும் காங்., கட்சியில் இருந்து பறிக்கப்பட உள்ள ஒரு இடம் ஆகிய மூன்றை சேர்த்தால், அரசின் பலம், 91 ஆக உயரும்.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் இயங்கும் அ.தி.மு.க. , ஒரிஸ்ஸாவின் பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்., இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளிடம், 26 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த கட்சிகள் பெரும்பாலும் ஆளும் அரசை தான் ஆதரித்து வருகின்றன. எனவே, இதையும் சேர்த்தால், பா.ஜ.க.வின் பலம், 117 ஆக உயரும். இத்துடன் நான்கு நியமன எம்.பி.,க்களின் ஆதரவை சேர்த்தால், பா.ஜ.க.வின் பலம், 121 ஆக உயரும். இதனால் கிட்டத்தட்ட, பெரும்பான்மையான, 123 எம்.பி.,க்களின் எண்ணிக்கையை நெருங்கிய விஷயமாகும். உ.பி.,யில் நடக்கும் தேர்தல் மூலம், 9 எம்.பி.,க்களில் எட்டு எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், பீஹாரில் அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது. தற்போது அந்த மாநிலத்தில், பா.ஜ.க.வுக்கு இரண்டு, ஐக்கிய ஜனதா தளத்திற்கு, நான்கு எம்.பி.க்கள் உள்ளனர்.