நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெறாமல் உள்ளதை பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக் குறித்து தொடர்ந்து சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு விவகாரத்தை பேச அனுமதிக்க வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.