மாட்டுக்கறி கொண்டுசென்றதாக ஜூனைத் கான் என்ற சிறுவன், டெல்லியில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் ரமதான் சமயத்தில் , ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி இஸ்லாமியச் சிறுவர்கள் மீது பசுபாதுகாப்பு பயங்கரவாதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜூனைத் கான் கொலைவழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் முதற்கட்ட விசாரணை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜூனைத் கான் கொலையில் தொடர்பு இருப்பதை அந்தக் குற்றவாளி ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர் குறித்த தகவல்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே டெல்லி அரசு ஊழியர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.