ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கடுமையாக பாதிக்கப்படும்: நடிகர் விஷால்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.

நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சினிமா துறைக்கு ரூ.28 சதவீத வரி விதிக்கப்பட்டு ஒட்டு மொத்த திரைப்படத்துறையினர் எதிர்ப்பால் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி என்றும் அதற்கும் அதிகமான தொகையை வசூலிக்கும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்றும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

இதையும் திரையுலகினர் ஏற்காமல் பிராந்திய மொழி படங்களுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடைசி முயற்சியாக மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களின் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள திரைப்பட தணிக்கை துறை அதிகாரி மதியழகனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

காலதாமதமின்றி படங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் ‘ஏ’ சான்றிதழ் பெறும் படங்கள் மறு தணிக்கை செல்வதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், சிறுபட்ஜெட் படங்களை டி.வி.டியில் பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

தணிக்கை அதிகாரியை சந்தித்து விட்டு வெளியே வந்த விஷால் நிருபர்களிடம் கூறும்போது, “திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக தமிழ் திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இது சினிமா தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

 

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top