வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, தற்போது லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையா இன்று லண்டனிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
நான் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன், தொடர்ந்து மறுப்பேன். நான் எந்த நீதிமன்ற விசாரணையிலிருந்தும் நழுவவில்லை, என்னுடைய தரப்புக்கான நியாயத்திற்கு போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் ஊடகங்களிடம் இது பற்றி எதுவும் தெரிவிக்கப்போவதில்லை, காரணம் நான் எதைக்கூறினாலும் திரிக்கப்படுகிறது. போதுமான ஆதாரங்கள் உள்ளன அது பேசும். எந்தக் கடன்களும் எங்கும் திசைத்திருப்பப் படவில்லை. நீங்கள் பில்லியன் பவுண்டுகள் குறித்து கனவு கண்டு கொண்டேயிருங்கள், ஆதாரமில்லாமல் உங்களால் எதையும் நிரூபிக்க முடியாது.
விஜய் மல்லைய்யாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்த கோர்ட் விசாரணையில், இந்திய அரசிடமிருந்து தேவையான சாட்சிய ஆவணங்கள் இன்னமும் வரவில்லை என்பதால், டிசம்பர் 4 – க்கு அடுத்த கட்ட விசாரணையைத் தள்ளி வைப்பதாக தலைமை நீதிபதி எம்மா அர்புட்னாட் தெரிவித்தார்.