சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட்

நடிகர்கள் சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் ஒன்றை நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது.

தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

அவ்வாறு உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ என்பவர் தொடுத்திருந்த வழக்கு, நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில்தான் இன்றைய உத்தரவும் வெளிவந்துள்ளது.

பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், இந்த நடிகர்களை நீதிமன்றம் முன்பாக ஆஜர்ப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top