குடியரசு கட்சியின் சுகாதார பாதுகாப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நூலிழையில் வெற்றியடைந்தை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஒபாமா கேர்’ திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். ‘ஒபாமா கேர்’ என்பது முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவினால் முன்னர் கொண்டுவரபட்ட சுகாதர பாதுகாப்புத் திட்டமாகும்.
217 வாக்குகள் ஆதரவாகவும், 213 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலையில் இந்த மசோதா வெற்றிபெற்றுள்ளது. தனக்கு முன்னர் அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு, புதிய திட்டத்தை வகுப்பதாக அதிபர் தேர்தல் பரப்புரையின்போது டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முதல்படியாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.
இந்த அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு சட்டம் மில்லியன் கணக்கானோரை மருத்துவக் காப்பீடு இல்லாமல் ஆக்கும் என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
வாக்கெடுப்பு நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிபரின் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆறு வாரங்களுக்கு முன்னர், போதுமான ஆதரவு இல்லாததால் இந்த சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்றும் முயற்சி இயலாத ஒன்று என்று தோன்றியது.