வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனை

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு  நடைபெற உள்ள நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ஜப்பான் அருகிலுள்ள கடற்பகுதியில் விழுந்ததாக பின்னர் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

முன்னதாக, வடகொரியா விவகாரம் தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்களிடமும் டிரம்ப் நேற்று போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் அடுத்த வாரம் நிகழும் ஜி-20 மானாட்டில் இவ்விஷயம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தியிருக்கிறது. இந்த நபருக்கு இதை விட்டால் வாழ்க்கையில் வேறு வேலையே இல்லையா ?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top